குழாய்

அந்த காலத்தில் கிராமத்தில் நடக்கும் கல்யாணம், புதுமனை புகுவிழா, சுபகாரியங்களுக்கு போய் இருந்திங்கனா, சாப்பிட்டு கை கழுவ ஒரு அண்டா அல்லது தவளையில் தண்ணி புடிச்சி, சொம்பு வச்சியிருப்பாங்க.

நகரங்களில் பெரும்பாலான இடங்களில் குழாய் இருக்கும். வலப்பக்கம் திருப்பினா தண்ணி வரும் இடப்பக்கம் திருப்பினா நிற்கும். மிக எளிய முறை.

அதுக்கு அப்புறம் தண்ணி மிச்சம் பன்னுறதுக்கு வந்தது ஸ்ப்ரிங் குழாய் (Spring Tap/Waste Not Water Tap/Jaison Water Tap). ரயில்வே ஸ்டேஷனில் அதிகமா பார்க்கலாம். இதை உருவாக்கிவர் கேரளாவின் சுப்பிரமணிய ஐயர். இதற்கு காப்புரிமையும் பெற்றார். குழாயின் முனையை தூக்கினால் தண்ணி வரும், விட்டால் நிற்கும். சில குழாய் கடினமா இருக்கும், சமயத்தில தண்ணி பீச்சி மேலே அடிக்கும்.

இன்னிக்கி தொழில் வளர்ச்சியால், தானியங்கி குழாய் (automatic tap) பெரிய ஹோட்டல், மாலில் வந்துடுச்சி. சாப்பாடு நல்லா இருக்குதோ இல்லையோ ஹோட்டல் உள்கட்டமைப்பு மட்டும் ஆடம்பரமா இருக்கும். அதிலும் குழாய் நவீனமயமாய் இருக்கும். இதுல பல வசதிகளும் இருக்கு, கஷ்டங்களும் இருக்கு.

கை நீட்டினா தண்ணி வரும், அப்புறம் கொஞ்ச நேரத்தில் நின்னுடும். ஆனால் இன்னும் தண்ணி வேணும்னா கையை எடுத்து திருப்பி நீட்டனும். அப்படியும் தண்ணி வரலேன்னா சென்சார் தேடணும், கைய எல்லா பக்கமும் காட்டணும். இதுல சென்சார் சரியா வேலை செய்லேன்னா இன்னும் கஷ்டம்.

சில குழாயில குமிழ் (knob) இருக்கும். அத மேலயா, கீழையா, வலதா, இடதா எந்த பக்கம் திருப்புனம் தெரியாது.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி காஞ்சிபுரம் போயிருந்தேன். அங்க ஒரு ஹோட்டலில் பிரஸ் ஒன்ஸ் குழாய் (press once tap) இருந்தது. ஏற்கனேவே பார்த்ததனால் கை கழுவியாச்சு. ஒரு வாலிபன், அவனுக்கு புதுசு போல ரொம்ப நேரமா அழுத்தி அழுத்தி பார்த்தான் தண்ணி நிக்கல, பொறுமை இழந்து, தண்ணிய எப்படி நிறுத்தணும் தெரியலையே புலம்பினான். தம்பி, குழாய அழுத்தாத, தண்ணி தானா நிற்கும், சொன்னதுக்கப்புறம் போனான். என்ன கொடும சரவணன்

இதுக்குனே குழாய எப்படி யூஸ் பண்ணனும் எழுதி ஓட்டணும்.

எந்த ஒரு தொழில் நுட்பமும் ஆடம்பரமா இருந்தா மட்டும் போதாது, எல்லா மக்களும் சின்னவங்க முதல் பெரியவங்க வரை யூஸ் பண்ற மாறி எளிய முறையில் இருக்கனும். அதே சமயம் தண்ணிய, காச மிச்சப்படுத்தனும்.

நன்றி
விஜயகுமார்

நட்பு

பேசாத காதலும், பேசாத மொழியும் வளருவதில்லை
வளையாத உடலும், வளையாத கொள்கையும் நிலைப்பதில்லை
கல்லாத மனிதனும், கல்லாத சமுதாயமும் முன்னேறுவதில்லை
நட்பை பேணாத உறவும், நட்பை பேணாத நாடும் சந்தோஷமாய் வாழ்வதில்லை.

இயற்கையும் வாழ்க்கையும்

ஆகாயம் போலவே பரந்த மனதிலே
நீரோடை போலவே தெளிந்த எண்ணமே

காற்றை போல் சுவாசி உந்தன் கனவுகளை
மண் போலே பொறுமையாக இரு வாழ்க்கையில்

கதிரவன் போலவே, உனது செயல்களும் ஒளிரவே
இயற்கையை போலவே, நம் வாழ்க்கையும் அமையவே.

உயிர் மழை

மழை மழை உயிர் மழை
உன் வருத்தத்தால் (பொழியாவிட்டால்) வாடும் பயிர்
நீ சிரித்தாலே தழைக்கும் வயிற்
உன் கோபத்தால் (மிகுதியால்) புதையும் உயிர்
அளவான மழை நிலையான மனம்
உலகிற்கும் வாழ்க்கைக்கும் தரும் சுகம்.

வா வா நண்பா

வா வா நண்பா நம் நினைவுகள் எல்லாம் புதிதாய்
வா வா நண்பா நம் நட்புகள் என்றும் இனிதாய்
கல்லூரி நாட்கள் அது என்றும் இனிய நாட்கள்
ஒன்றாய் சேர்த்தது நம்மை நாம் வேடந்தாங்கல் பறவை

ஆடைகள் தானே பகிர்ந்தோம், ஆசைகளோடு திரிந்தோம்
நண்பன் வாங்கியதெல்லாம் , எல்லோருக்கும் சொந்தம்
ஒன்றாய் கூடி வாழ்ந்தோம், வேற்றுமை என்பதே மறந்தோம்
கட்டடுச்சி திரிந்தோம் தலைவர் படம் பார்த்தோம்
கள்ளுக்கடை தேடி ஒன்றாய் கூடி அடிச்சோம்.

கல்லூரி பஸ்சில் வந்து அழகாய் பெண்கள் இறங்க
தினமும் காலை தானே catwalk ரசித்தோம் நாமே
ஆளில்லாத theatre கடலை போட தானே
தலைவர் படம் வந்தா first show போவோம் தானே

பரிட்சை வந்தா போதும், புக் தானே கிழிப்போம்
பாஸு வந்தா சந்தோஷத்தில் , கப்பு வந்தா துக்கத்தில்
சரக்கடிச்சி உணர்வுகள் தானே பகிர்ந்தோம்.

நண்பனோட பிறந்தநாள் நடுஜாமத்தில் குளிப்பாட்டுவோம்
ஆட்டம் பாட்டம் போட்டு ராத்திரியலாம் அதகளம் செய்வோம்
திசைகள் மாறி திரிந்தோம், வானில் உயர பறந்தோம்
நம் வாழ்க்கை தந்தது எல்லாம், நல்ல நினைவுகள் தானே நண்பா.

வலி

ராஜன் திருநெல்வேலியில் போலீஸ் கான்ஸ்டபிள். அன்று விடுப்பெடுத்து தனது மூன்று வயது மகள் இனியாவுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்பொழுது அலைபேசி ஒலித்தது. மறுமுனையில், உயர் அதிகாரி, தூத்துக்குடியில் போராட்டம் நூறாவது நாள் ஆவதையொட்டி ஊர்வலம் சென்று கலெக்டரை சந்தித்து மனு தர இருக்கின்றனர், பாதுகாப்பு பணிக்காக உடனே வருமாறு கட்டளையிட்டார்.

ராஜன் மனைவி அகிலாவிடம் விவரத்தை சொன்னான். அகிலா “நீங்க கிளம்புங்க நான் அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு தூங்க வைக்கிறேன்”. ராஜன் கடுப்போடு கிளம்பினான்.

மறுநாள் இனியா TV பார்த்துக்கொண்டிருந்தாள் அகிலா சமயலறையில் வேலை செய்துகொண்டிருந்தாள்.

TV யில் முக்கிய அறிவிப்பு “நூறாவது நாள் போராட்டத்தில் கலவரம் துப்பாக்கி சூடு”.

போராட்டக்காரர் ஒருவரை போலீஸார் தடியால் அடிப்பது ஒளிப்பரப்பானது. போராட்டக்காரர் வலியால் துடித்தார் கெஞ்சினார்.போலீஸ் முகம் மிக அருகில் காட்டப்பட்டது அது ராஜனாக இருந்தது. இனியா பயந்தாள் அழ தொடங்கினாள். அகிலா சத்தம் கேட்டு ஓடிவந்தாள் அந்த காட்சி மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அகிலா டிவி யை அனைத்துவிட்டு இனியாவை தூக்கி சமாதானம் செய்தாள்.

மூன்று நாட்கள் கழித்து தூத்துக்குடி இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது. ராஜன் களைப்போடு, போலீஸ் உடையில், கையில் தடியோடு வீட்டிற்குள் நுழைந்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டு இனியா ஓடிவந்தாள், அவளுக்கு திக்கென்று இருந்தது, முகம் சுருங்கியது, அழ தொடங்கினாள். ராஜன் தூக்கினான் அவள் அழுகை அதிகமானது, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அகிலா வந்து இனியாவை வாங்கி சென்றாள். அன்று இரவும் இனியா தேம்பி தேம்பி அழுதாள், ஒரு வழியாக அவளை தூங்க வைத்தாள். ராஜனிடம் நடந்ததை சொன்னாள். அவன் இனியாவின் தலையை வருடினான், இனியா மீண்டும் தூக்கத்தில் அலறினாள்.

ராஜன் கண்கள் கலங்கியது நெஞ்சம் வலித்தது.

ஆனந்த மழை

சின்ன சின்ன மழைத்துளி
வந்து வந்து தேகம் நனைத்திட
நாக்கை நீட்டி மழையும் ருசித்திட
மொட்டைமாடியில் ஆடி பாடி குதித்திட
ஆனந்தம் பொங்குதடி

ஜன்னல் ஓரம் ரயிலில்
மழைச்சாரல் தெளித்திட
குளிர் காற்றும் வீசிட
பச்சை பசுமை கண்கள் ரசித்திட
ஆயிரம் கனவுகள் நெஞ்சில் சுமந்திட
ஆனந்தம் பொங்குதடி

கண்ணுக்கு அழகான காதலி
வந்து பைக்கில ஏறிக்கொண்டு
கட்டி அணைத்து சாய்ந்து கொள்ள
வானம் சின்ன சின்ன தூறலிட
காற்றை கிழித்து நாமும் பறந்திட
மலையோ கடற்கரையோ தஞ்சம் அடைந்திட
ஆனந்தம் பொங்குதடி

சுட சுட பஜ்ஜியும்
ஆவி எழும் காப்பியும்
வீட்டின் முகப்பில் ஜோடியாக அமர்ந்திட
மனதை வருடும் இசையும் (ராஜாவின்) கேட்டிட
தென்றல் வந்து தீண்டிட
ஆனந்தம் பொங்குதடி

Modern பொண்ணு

Modern பொண்ணுதான் மனசில் தெம்புதான்
பெரியார் பேத்திதான் அதை உரக்கச்சொல்வோம் என்றும்தான்
சிறகை விரித்துதான் வானில் பறக்கலாம்
எண்ணம் யாவையும் செயலாய் மாற்றியே வெற்றி காணலாம்.

சமையலறை தாண்டியே வந்தாச்சு
கல்விக்கூடம் எல்லாமே நிரம்பியாச்சு
ஆணிற்கு நிகராக உயர்ந்தாச்சு
உரிமையும் சொத்தும் இங்கே சமமாச்சு
அடிமைத்தனம் எல்லாமே உடைத்தெறிஞ்சாச்சு
அதிகாரமும் ஆட்சியும் இனி நமதாச்சு.

Modern பொண்ணுதான் மனசில் தெம்புதான்
பெரியார் பேத்திதான் அதை உரக்கச்சொல்வோம் என்றும்தான்

வெறும் அழகு பொருளாக எங்களை பார்க்க தேவையில்லை
வீட்டை மட்டும் பார்த்துக்கொள்ளும் பெண்களாக நாங்களில்லை
கடவுள் என்று போற்றியே பூஜிக்க தேவையில்லை
சக மனுஷியாக பார்க்கவேண்டும் அதுதானே எங்கள் நிலை

வீரமும் விவேகமும் அறிவும் தெளிவும் எங்களிடம் காண்பீர்
ஆசையும் கனவும் உணர்வும் உழைப்பும் உள்ள பெண்டீர்.


இன்று தான் பூக்கிறேன்

இன்று தான் பூக்கிறேன்
என் விழிகள் அவனை பார்த்ததும்
இதயம் சத்தம் கேட்குதா
என் துடிப்புக்கு அவனே காரணம்
வாழ்விலே எல்லாம் அழகாய் தெரியுதே
என் பருவமே இன்று தானே உணர்கிறேன்

காரணம் தேடுதே என் மனம் அவனிடம் போய் பேசவே
வார்த்தைகள் திக்குதே என்கண் முன் அவன் தோன்றையிலே
என் இரவுகள் போகுதே அவனை தலையணையாய் அணைத்துக்கொண்டு
தனிமையில் சிரிக்கிறேன் அவனிடம் கற்பனையில் பேசிக்கொண்டு
என் வாழ்க்கையின் பயணத்தை அவனுடன் நானும் நினைக்கிறேன்
என் காதலை சொல்லவே பலவகையாய் யோசிக்கிறேன்

கைபேசியில் அவன் புகைப்படம் நிரம்ப சேருதே
கண் விழித்ததும் அவனை பார்க்கவே என் மனம் துண்டுதே
என்னை பிடித்தது ஒரு காதலே அதில் தினமும் நான் தவிக்கிறேன்
என் ஆணவம் அது தோற்றது அவன் அழகில் தானே விழுந்தது
அவன் செய்வது யாவுமே நான் ரசிக்கிறேன்
என்னை அறியாமலே அவனை நான் தினமும் ஈர்க்கிறேன்

பூவையும் சேலையும் சூடிக்கொண்டு
நகைகளும் வளையலும் மாட்டிக்கொண்டு
அவன் தரிசனம் காணவே நானும் சிலையாய் நிற்கிறேன்
கோவில் சிலையாய் நிற்கிறேன்.